காங்கிரஸ் தலைமையகமாக இருந்த இடத்தை காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ்
1 min read
Central government issues notice to vacate the site where Congress headquarters was located
25.3.2026
“24, அக்பர் சாலை, டெல்லி..” இதுவே கடந்த ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையகத்தின் முகவரி.
1978 முதல் கடந்த 48 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் உள்ள பங்களா கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையகம் செயல்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில் ITO அருகே உள்ள ‘இந்திரா பவன்’ என்ற புதிய கட்டிடத்திற்கு காங்கிரஸ் தலைமையகம் மாற்றப்பட்டாலும், அக்பர் சாலை அலுவலகம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் மற்றும் ராய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை வரும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2015 ஆம் ஆண்டிலேயே அக்பர் சாலை பங்களா உள்ளிட்ட நான்கு அரசு கட்டிடங்களின் ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி அங்கு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கெடுவிற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
அக்பர் சாலை பங்களா
1977 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து கட்சி உடைந்தபோது, இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஜி.வெங்கடசாமி தனது இந்த அரசு பங்களாவைத் தலைமையகமாக மாற்றிக்கொள்ள வழங்கினார்.
இங்கிருந்துதான் இந்திரா காந்தி மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளும் இந்த அக்பர் சாலை அலுவலகத்தில்தான் எடுக்கப்பட்டன.