ஈரான் தூதரை சந்தித்து பாராட்டிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்
1 min read
Union Minister Jaishankar meets and praises Iranian Ambassador
25.3.2026
மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. எனினும், நட்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரான் மற்றும் இந்தியா இடையேயான பரஸ்பர நட்புறவால், இந்தியாவை சேர்ந்த 6 கப்பல்கள் வரை செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, ஈரானில் வசிக்க கூடிய இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு விமானம் வழியே வருவதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய வெளிவிவகார துறைக்கான மந்திரி ஜெய்சங்கர் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவுக்கான ஈரான் தூதர் டாக்டர் முகமது பதாலியை இன்று மதியம் நேரில் சந்தித்து பேசினேன்.
அப்போது, மேற்காசியாவில் காணப்படும் மோதல் தொடர்பான விசயங்களை பற்றி இருவரும் கலந்து ஆலோசித்தோம். இந்த சவாலான தருணங்களில் ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக நான் பாராட்டுகளை தெரிவித்து கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.