ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
1 min read
Two young men sentenced to death for participating in anti-government protests in Iran
6.4.2026
கடந்த ஜனவரி மாதம் பொருளாதார நெருக்கடியால் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியது. இந்த போராட்டத்தில் மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகின. மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஜனவரி மாத போராட்டத்தின்போது தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய ராணுவ மையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த ஆயுதக் கிடங்கிற்குள் நுழைய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முகமது அமீன் பிக்லாரி மற்றும் ஷாஹின் வஹேதி ஆகிய இரண்டு இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ராணுவ ரகசியங்களைத் திருட முயன்ற எதிரி நாட்டு ஏஜெண்டுகள் என்று ஈரான் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்னதாக போராட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் அமீர்ஹொசைன் ஹடாமி என்பவருக்கு ஏப்ரல் 2 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
மார்ச் மாத இறுதியில் இதே வழக்கில் தொடர்புடைய அக்பர் தனேஷ்வர்கர், முகமது தக்வி சங்க்டேஹி, பூயா கோபாடி பூஸ்தானி மற்றும் பாபக் அலிபூர் ஆகியோருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போருக்கு மத்தியில் ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டு வருவதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேலும் 11 பேர் உடனடியாகத் தூக்கிலிடப்படும் அபாயத்தில் இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரித்துள்ளது.
இவர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.