ஈரானில் குடியிருப்பு கட்டிடம் மீது வான்வழி தாக்குதலில் 13 பேர் பலி
1 min read
13 killed in airstrike on residential building in Iran
6.4.2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா ஈரான் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது. போரினால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார்.
ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை. ஈரானுக்கு இறுதி கெடுவை தற்போது ட்ரம்ப் விடுத்துள்ளார். நாளைக்குள் ஒப்பந்தம் ஏற்காவிட்டால், ஈரானுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கும் எனவும் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்ற விவரம் தெரியவில்லை. தெஹ்ரானில் உள்ள ஷரீஃப் பல்கலைக்கழகத்தை குறிவைத்தும் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது. வான்வழி தாக்குதலால், குடியிருப்பு கட்டிடம் சேதம் அடைந்துள்ளதோடு, இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது