விஜயின் நெல்லை பிரசாரத்தில் 4 விபத்து; 10 பேர் காயம்
1 min read
4 accidents; 10 injured during Vijay’s paddy campaign
8.4.2026
விஜய் ரோடு ஷோவில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.அவரின் வாகனத்தை பைக்குகளில் பின் தொடர்ந்தவர்கள் கீழே விழுந்தனர். இன்றைய பிரசாரத்தில் மட்டும் 4 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தவெக தலைவரும் நடிகமருமான விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இன்று பிரசாரம் செய்தார். அவரின் பிரசாரத்திற்காக 51 கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கே.டி. சி நகரில் பிரசாரம் செய்த விஜய், அதன் பின்னர், சாலை மார்க்கமாக சென்றார். கிட்டத்தட்ட 35 கிமீ வரை சாலை வழியாக அவரது பயணத்திற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறப்பட்டது.
பிரசார வாகனத்தின் மேல்புறம் நின்று கொண்டே சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்தாவறும், வணக்கம் வைத்தவாறும் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
விஜயின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்தபடி ஏராளமான பைக்குகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த தொண்டர்கள் குரல் எழுப்பியபடியே சென்றனர்.
அப்போது தாழையூத்து பகுதிக்கு விஜய் தமது வாகனத்தில் வந்தபோது பின் தொடர்ந்தவர்களின் சிலரின் பைக்குகள் விபத்தில் சிக்கின. முன்னே சென்ற வாகனங்களுடன், பைக்குகள் மோத, அதில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர். பைக்குகள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கி. கீழே சரிந்தன. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பதற்றம் உருவானது.
முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்படும் முன் இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. விஜய் வந்த வாகனம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, ரசிகர் ஒருவர் விஜயிடம் சிலை கொடுக்க வந்தார். அப்போது அவரின் பாதுகாவலர்கள் அவரை ஒதுக்கித் தள்ளினர்.
இதனால் அவருக்கு பின்னால் வந்த வாலிபர்களும் நிலைதடுமாற ஒட்டுமொத்தமாக அனைவரும் அங்கேயே சரிந்து விழுந்தனர். ஒட்டுமொத்தமாக விஜய்யின் இன்றைய பிரசார நிகழ்வில் மட்டும் 4 விபத்துகள் அரங்கேறி உள்ளன.