தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு(1991)- ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார்
1 min read
Tamil Nadu Assembly Election History (1991) – Jayalalithaa came to power
17.4.2026
1991 ஜனவரி 30ல் (மகாத்மா காந்தி படுகொலையான நாளில் தமிழ்நாட்டில் மீண்டும் ஜனநாயகப்படுகொலை) திமுக அரசை டிஸ்மிஸ் செய்த சந்திரசேகர் அரசு, காங்கிரஸ் ஆதரவை இழந்ததால் அதே ஆண்டு மார்ச்சில் கவிழ்ந்தது. இதனால் நாடாளுமன்றத்துக்கும், அதோடு தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரசும், அதிமுகவும்
கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. முந்திய தேர்தல்களின் வாக்கு பலத்தை கணக்கிட்டதில் அது வலுவான கூட்டணியாக களம் கண்டது.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சிக்கழகம் (டி ராஜேந்தர்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.
அப்போது, ஜனதா தளத்தின் தமிழ்நாடு தலைவராக சிவாஜிகணேசன் பதவி வகித்தார். அவர் 1989ல் தொடங்கிய கட்சியை கலைத்து விட்டார். தாயக மறுமலர்ச்சிக்கழகம், டைரக்டர் டி.ராஜேந்தர் தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்த கட்சியாகும்.
மனித வெடிகுண்டுக்கு இரையான ராஜீவ்
நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்தது. காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி டெல்லியில் மே 21-ந் தேதி ஓட்டுப்போட்டு விட்டு, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போது, ஸ்ரீபெரும்புது£ரில் விடுதலைப்புலிகளின் மனிதவெடிகுண்டுக்கு இரையானார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் நாடே அதிர்ந்து போய் அடுத்த
கட்ட தேர்தல்கள் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டன.
ராஜீவ் மரணத்தால் தமிழ்நாட்டில் அனுதாப அலையையும், தாண்டி ‘கோப அலை’ வீசியது. விடுதலைப்புலிகள் மீதான கோபம், திமுகவின் மீது திசை திருப்பப்பட்டு கொலைப்பழி திமுக மீது சுமத்தப்பட்டது. அது அதிமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது. 63.84 சதவீத ஓட்டுகள் பதிவான இந்தத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி இமாலய வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் (காங் 28, அதிமுக 11) இந்த அணி வென்றெடுத்தது.
சட்டமன்றத்திலும் இதே அணி 234க்கு 225 தொகுதிகளை அள்ளியது.
அதிமுக 165, காங்கிரஸ் 60.
அதிமுக அணி 1,47,38,042 (59.79 சதவீதம்).
திமுக ஒரே ஓரிடமே (தலைவர் கருணாநிதி மட்டும்) வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூ 1, ஜனதா தளம் 1. இந்திய கம்யூ 1. திமுக ஆதரவு வேட்பாளர்கள் 2 (திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன்).
திமுக அணி வாக்குகள் 74,05,935 (30.05 சதவீதம்).
பாமக உதயமாகி ஓரிடம் வென்றது
இந்தத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானபின், வன்னியர் அதிகமாக உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு 14,52,982 ஓட்டுகள் (5.9 சதவீதம்) வாங்கியது. அந்தக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன்
மட்டும் பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஸ்ரீவில்லிபுத்து£ர் தொகுதியில் தாமரைக்கனி சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
திமுக ஆதரவுடன் வென்ற திருநாவுக்கரசர் (அறந்தாங்கி), சாத்தூர் ராமச்சந்திரன் (சாத்தூர்) ஆகியோரும் உடனடியாக அதிமுகவில் இணைந்து விட்டனர்.
ஜெயலலிதா, பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பர்கூரில் அவரை எதிர்த்து திமுக ஆதரவுடன் போட்டியிட்ட டி. ராஜேந்தரை 37,215 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
காங்கேயத்தில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியரை 33,291 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.
தமிழ்நாட்டின் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண் முதல்-அமைச்சராக அவர் 24.6.91 அன்று பதவி ஏற்றார்.
அவர் வென்ற 2 தொகுதிகளில் காங்கேயம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக
ஆர்எம் வீரப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில்
ஜெயலலிதாவுக்கு எதிரான அணிக்கு தலைமை தாங்கி தீவிரமாக அரசியல் செய்தவர் தான் ஆர்எம்.வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
(அடுத்த தேர்தல் 1996).
1991 தேர்தல் கண்ணோட்டம்
மொத்த இடங்கள் 234
அதிமுக 165
காங்கிரஸ் 60
திமுக 1+1
சிபிஎம், சிபிஐ, ஜனதாதளம் தலா 1
திமுக ஆதரவு 2
பாமக 1
சுயே 1
அலையில் தப்பிய ஒரே ‘தலை’

1991 ராஜீவ் படுகொலை கோப அலையில் சிக்கி திமுக வாஷ்-அவுட் ஆனது என்ற பெயர் வராமல் ஒரே ஒருவர் மட்டும் அதுவும் கட்சித்தலைவர் கருணாநிதி மட்டும் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதுவும் இழுபறியில்..
கருணாநிதி 30,932
சுப்பு (காங்) 30,042
(வித்தியாசம் 890.
துறைமுகத்தில் வெற்றி பெற்றாலும் கருணாநிதி பதவி ஏற்காமலே ராஜினாமா செய்து விட்டார். பின்பு துறைமுகத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் செல்வராஜ் வெற்றி பெற்றார்.
இதேபோல் எழும்பூர் இடைத்தேர்தலில் பரிதிஇளம்வழுதி வெற்றி பெற்று திமுகவின் கணக்கை 2 ஆக உயர்த்தினார்.
1991 தேர்தலில் கட்சியை கரை சேர்ப்பது கடினம் என்பதை கருணாநிதி உணர்ந்தே இருந்தார். ஏனெனில் ராஜீவ் கொலை நடந்ததுமே திமுகவினர் ஆங்காங்கே தாக்குதலுக்கு ஆளானார்கள். கொடிகள் கிழிக்கப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. மேடை போட்டு பிரசாரம்
செய்ய முடியாத சூழலிலும் கருணாநிதி மனம் தளராமல் சைக்கிள் ரிக்ஷாவிலும், தள்ளுவண்டிகள் மீதும் ஏறி நின்று பிரசாரம் செய்து தனது அணிக்கு ஓரளவு வாக்குகளைப் பெற்றுத்தந்தார்.
(கட்டுரைத் தொகுப்பு மணிராஜ்)