கொடைக்கானலில் இருந்து மு.க.ஸ்டாலின் நாளை திரும்புகிறார்
1 min read
MK Stalin returns from Kodaikanal tomorrow
28.4.2026
சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார். அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார். அதன்படி அவர் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
3-வது நாளான இன்று காலை 6.45 மணி அளவில் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் ஏரி சாலையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
இந்த நிலையில் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் முதல்-அமைச்சர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.