சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை-குஜராத்தில் அறிமுகம்
1 min read
Automatic toll collection system at toll booths – introduced in Gujarat
2/5/2026
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த நெடுஞ்சாலைகளை கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில், ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், மின்னணு பரிமாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு, கார் கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ வில்லைகள் மூலம் கணக்கில் இருந்து பணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் தேசிய நெடுஞ்சாலை-48 ல் சூரத்-பருச் பிரிவில் உள்ள சோராயாசி சுங்கச்சாவடியில் இந்த தடையற்ற சுங்க கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட் காரி அறிவித்துள்ளார்.
இதன்படி சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்களை நிறுத்த வேண்டியது இல்லை. கேமராக்கள், சென்சார்கள் ஆகியவை மூலம், வாகன எண்பலகை மற்றும் ‘பாஸ் டேக்’ வில்லையை அடையாளம் கண்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுகுறித்து நிதின் கட்காரி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “நெடுஞ்சாலை சுங்க கட்டண முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய சுங்கச்சாவடிகளை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் ஆகியவற்றை உலகத்தரத்துக்கு ஏற்ப மாற்றியதில் இது மிகப்பெரிய மைல்கல்.
இதன்மூலம் பயண நேரம் குறையும். நெரிசல் குறையும். எரிபொருள் பயன்பாடு, வாகனமாசு ஆகியவை குறையும். கட்டண வசூலில் மனித தலையீடு குறையும்” என்று பதிவிட்டிருந்தார்.