மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,408.69 கோடி வருமானம் ஈட்டி புதிய சாதனை
1 min read
Madurai Railway Division creates new record by earning Rs. 1,408.69 crore in revenue
10.5.2026
மதுரை ரயில்வே கோட்டத்தில் 2025-26ஆம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.1,408 கோடியாக உயர்ந்திருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. 2025-26ஆம் நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த அதிக வருமானம் கடந்தாண்டை காட்டிலும் (ரூ.1,245 கோடியை விட) 13 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மொத்தம் ரூ.1,408 கோடி வருமானம் கிடைத்துள்ள நிலையில், இதில் பயணிகள் பயணச்சீட்டு விற்பனை மூலம் மட்டும் ரூ.886.32 கோடி வருவாய் பதிவாகி இருக்கிறது. அதே நேரம் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.411 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 10 சதவீதம் அதிகமாகும்.
இதர வருமானங்கள் என்கிற வகையில் பயணச்சீட்டு பரிசோதனை மூலம் ரூ.12.73 கோடி வசூலாகியுள்ளது. 97 சதவீத ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்பட்டு, பயணச்சீட்டு இல்லாதோர் மற்றும் ரயில்வே சட்ட விதிகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ.12.73 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
உணவகச் சேவைகள் (Catering) மூலம் ரூ.7.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 95.70% அதிகம் ஆகும். பார்சல் சேவைகள் மூலம் ரூ.10.78 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பழைய இரும்பு பொருட்கள் (ஸ்கிராப்) விற்பனை மூலம் ரூ.27.38 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருவாயானது தெற்கு ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த ரூ.1,340 கோடி என்ற இலக்கை விட 5 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.