வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து: சிபிஐ வழக்குப் பதிவு
1 min read
NEET question paper leak: CBI registers case
12/5/2026
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரத்தில் ஆயுர்வேத மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 551 நகரங்களில் கடந்த 3 ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. வெளிநாட்டிலும் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதனால் நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் 7 முதல் 10 நாள்களுக்குள் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.
மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் கையால் எழுதப்பட்ட ஒரு வினாத்தாள் தேர்வுக்கு சரியாக 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப்களில் பரவியுள்ளது. அதில் இருந்த 120 கேள்விகள் நீட் வினாத்தாளிலும் இடம்பெற்றிருந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.