தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்
1 min read
There is no power outage in Tamil Nadu; Minister Nirmal Kumar declares
23.5.2026
‘தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏதும் இல்லை. தேவையான கையிருப்பு இருக்கிறது,’ என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; தமிழகத்தில் மின்தடை ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து மின்வாரியம் சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.லோடு கம்மியாக இருப்பதாலும், ஒரு சில இடங்களில் லோடு அதிகமாக இருப்பதாலும் டிரிப்பிங் ஆகிறது. திடீரென ஏற்படும் பிரச்னைகளால், சென்னையில் மட்டும் நேற்று இன்ஜினியர்கள் அடங்கிய 7 ரேப்பிட் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் மின்சார பிரச்னை ஏற்படுகிறதோ, இந்தக் குழு உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று கோளாறை சரிசெய்கின்றனர். இதனால், பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது.
அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு துணை மின்நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றன. நிறைய இடங்களில் பழைய டிரான்ஸ்பார்மர்கள் என்பதால் பாதிப்பு வருகின்றன. கேபிள்களில் பிரச்னை வருகிறது. ஒரு சில இடங்களில் அங்கிருக்கும் தனி நபர்களால் மின்சாரம் தடைபடுவதாக தெரிகிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது யாருடைய தூண்டுதலின் பேரில் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் எல்லாம் யார் என்று கணக்கிடும் பணி நடந்து வருகிறது. அதுபோன்ற நபர்கள் மீது இன்றிரவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நலிவடைந்து வந்து, ரூ.2.50 லட்சம் கோடி கடனில் இருக்கிறது.1.40 லட்சம் வேலை செய்ய வேண்டிய இடங்களில் 70 ஆயிரம் பேர் தான் வேலை செய்கின்றனர். அதைத் தாண்டி பழைய டிரான்ஸ்பார்மர்கள் இருக்கின்றன, துணை நிலையங்கள் உருவாக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டு, எந்த வேலையும் நடக்கவில்லை. நிறைய இடங்களில் இன்னும் அதற்கான பணிகள் செய்யப்படவில்லை. தற்போது முழுவதுமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏதாவது ஒரு தனிநபரின் மீது தவறுகள் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மின்சாரம் தட்டுப்பாடு இல்லை. தமிழகத்திற்கு தேவையான அளவு மின்சாரம் கையிருப்பு உள்ளது. முழு சீரமைப்பு பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இதற்கு சில மாதங்கள் பிடிக்கலாம்.
99 சதவீதம் சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு மத்தியில் ஒரு சதவீதம் பேர் கருப்பு ஆடுகளாக உள்ளனர். 24 மணிநேரம் செயல்படும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அழைப்பு விடுத்து புகார்கள் தெரிவித்தால், பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் இரவு, பகல் தூங்காமல் பணியாற்றி வருகின்றனர்.
சூரிய மின்உற்பத்திக்கு பல்வேறு இடங்களில் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இரு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திங்கட் கிழமை முதலீட்டாளர் சந்திப்பு நடத்துகிறோம். அனைத்து தவறுகளையும் சரி செய்து, மின்வாரியம் மீட்டெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.