புலியூர் அணைக்கட்டு மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள்- எம்.எல்.ஏ. ஆய்வு
1 min read
Puliyur Dam and Canal Dredging Works – MLA Inspection
15.6.2026
தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலபாட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், புலியூர் அணைக்கட்டு மற்றும் அதனுடன் இணைந்துள்ள கால்வாய்களில் கழிவுநீர் கலப்பது, ஆகாயத்தாமரை, முட்புதர்கள், சிறு மரங்கள் மற்றும் மண்மேடுகள் ஆக்கிரமித்திருப்பதால் நீர்வரத்து பாதிக்கப்பட்டு, குளங்கள் நிரம்பாத நிலை ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப் படுவதாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு விவசாயிகளின் கோரிக்கையை கொண்டு சென்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன், தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே புலியூர் அணைக்கட்டு மற்றும் அதனுடன் இணைந்துள்ள கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் தற்போது தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் பாட்டாக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், புலியூர், சுரண்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு அதிகளவில் நீர் சென்றடையும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் பயன் கிடைக்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதன்படி நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேற்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலை கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன், பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன், வழக்கறிஞர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சன் ராஜா, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் சுரண்டை முத்துக்குமார், தென்காசி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி மற்றும் கீழப்புலியூர், மேலப்பாட்டாக்குறிச்சி , கீழப்பாட்டாக்குறிச்சி பகுதி விவசாயிகள் கலந்து
கொண்டனர்.