June 29, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சர் விஜய் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார்

1 min read

Chief Minister Vijay is visiting Karur in the second week of July.

29.6.2026
ஜூலை 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்கிறார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் நேரடியாக செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் பல்வேறு நிர்வாகக் காரணங்களால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்யிடமும் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றதையடுத்து சிபிஐ விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்ததை தொடர்ந்து கடந்த 11-ம் தேதி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 4 போலீசார் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்மூலம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஜூலை 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *