ஆந்திராவில் 6 தலைமுறையாக சேர்ந்து வாழும் பிரமாண்ட கூட்டுக்குடும்பம்
1 min read
A massive joint family in Andhra Pradesh living together for six generations.
13.7.2026
ஆந்திராவில் 6 தலைமுறையாக 83 நபர்கள் ஒற்றுமையாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா. இவரின் குடும்பத்தில் மொத்தம் 83 நபர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தங்களின் வசதிக்காக அடுத்தடுத்து உள்ள நான்கு வீடுகளில் வசித்தாலும், அனைவரும் ஒரே குடும்பமாகவே செயல்படுகின்றனர்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே சமையலறையில்தான் உணவு சமைக்கப்படுகிறது. மருமகள்கள் அனைவரும் ஒற்றுமையாக சமையல் பணிகளைப் பகிர்ந்து செய்கின்றனர். அதாவது, பகிரப்படும் வேலைகள் குடும்பத்தில் உள்ள நபர்களின் வயதிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. பெரியவர்கள் குடும்பத்தை வழிநடத்த, இளைஞர்கள் தொழில் மற்றும் விவசாயத்தைக் கவனித்துக் கொள்கின்றனர்.
இக்குடும்பத்திற்கு சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானமும் ஒரே பொதுக் கணக்கில்தான் சேர்க்கப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு முன்மாதிரியாகத் திகழும் இவர்களது ஒற்றுமை, சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நவீன காலத்தில் தனிக்குடித்தனங்கள் பெருகிவரும் வேளையில், ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 உறுப்பினர்கள் ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.