தமிழக அமைச்சர்களுடன் நித்யானந்தா பிரதிநிதிகள் சந்திப்பு
1 min read
Nithyananda’s representatives meet Tamil Nadu ministers.
18.7.2026
3 தமிழக அமைச்சர்களை கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக நித்யானந்தா வெளியிட்ட பதிவால் பரபரப்பு நிலவுகிறது.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாசா எனும் நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி நித்யானந்தா தனது எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் த.வெ.க. அமைச்சர்கள் லோகேஷ், ஸ்ரீநாத், வன்னி அரசு ஆகியோரை சந்தித்து ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின்போது, “சுவாமி நித்யானந்தா எழுதிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’, ‘கைலாசாவின் வரலாறு’ ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்கு பரிசாக அளித்தோம்.
இந்த புத்தகம் சனாதன தர்மத்தின் மீட்சிக்கும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு நிர்வாகிகள் சந்தித்த புகைப்படங்களையும் நித்யானந்தா பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, “நித்யானந்தா சொல்வதைப்போல எந்த அரசாங்க ரீதியான சந்திப்பும் நடைபெறவில்லை. மனு கொடுப்பதற்காக தினமும் அமைச்சர்களை நிறைய பேர் சந்திக்கிறார்கள். அதுபோல வந்தவர்கள்தான் புத்தகத்தை கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை. நித்யானந்தா பதிவில் கூறியிருப்பது தவறான தகவல்” என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்-க்கு நித்தியானந்தா வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.