த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி: 3 பேரிடம் இருந்து ரூ. 2 கோடி ரொக்கம் பறிமுதல்
1 min read
Plot to topple TVK government: Rs 2 crore in cash seized from three individuals.
18.7.2026
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கலைக்க முயற்சிகள் நடப்பதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். தவெக எம்எல்ஏக்களிடம் இதற்காக பேரம் பேசப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. ரூ.35 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு தவெக எம்எல்ஏ இளையராஜா மயங்கவில்லை. மாறாக தன்னிடம் பேரம் பேசியவர்கள் பற்றி அவர் சென்னை திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வழக்கில் கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை 12 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி, சாலி கிராமத்தை சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையை சேர்ந்த வினோத் ஆகிய மூவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.