அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
1 min read
Water released from Adavinayak Dam
29.7.2026
தென்காசி மாவட்டம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர்ரஞ்ஜீத் சிங்,
தண்ணீர் திறந்து விட்டார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து கார் பருவசாகுபடிக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். இன்று (29.07.2026) தண்ணீர் திறந்து விட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு இன்றைய தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயன்பாட்டிற்காக சரியான நேரத்தில் கார்சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசன வசதிக்கு இது மிகவும் உபயோகமாக உள்ளது. தண்ணீரை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து திறந்து விடவும். ஒருவர் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்காமல் அனைவர் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடையிடையே அதனை ஆய்வு செய்து குறைகள் இருப்பின் சரிசெய்து தரப்படும்.
அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின்கீழ் பாசனம்பெறும் இலத்தூர் கால்வாய், நயினாரகரம் கால்வாய், கிளங்காடு கால்வாய். கம்பிளி கால்வாய், புங்கன் கால்வாய் மற்றும் சாம்பவர்வடகரை கால்வாய் ஆகியவற்றின் 2147.47 ஏக்கர் நேரடிப் பாசன நிலங்களுக்கு 29.07.2026 முதல் 31.10.2026 வரை 95 நாட்களுக்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 268.43 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
எதிர் வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர்வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை யென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், கேட்டுக் கொண்டுள்ளார்.
அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் வடகரை மேல்பிடாகை, வடகரை கீழ்பிடாகை, பண்பொழி,குத்துக்கல்வலசை, அச்சன்புதூர், நயினாகரம், ஆய்க்குடி, இலத்தூர், கொடிக்குறிச்சி நெடுவயல், கிளாங்காடு, கம்பளி, சாம்பவர் வடகரை ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.
இந்நிகழ்வில் உதவி பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) அந்தோணிராஜ், பிரிவு கோட்ட அலுவலர் குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.