பாலியல் வன்கொடுமை வழக்கில் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min read
Tarun Tejpal sentenced to 10 years in prison in sexual assault case
6.8.2026
கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில் கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தெஹல்கா நிகழ்ச்சியின்போது, அதன் நிறுவனர்களில் ஒருவரான தருண் தேஜ்பால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார். இதையடுத்து தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த கோவா செஷன்ஸ் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் தருண் தேஜ்பாலுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள், அவர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாகவோ அல்லது அச்சமடைந்ததாகவோ தெரியவில்லை என்று குறிப்பிட்டு, கடந்த 2021-ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அப்போது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தருண் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் முக்கிய ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் ஆஜரான தருண் தேஜ்பால், “எனக்கு 62 வயதாகிறது. நான் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானவன். எனக்கு குடும்பம் உள்ளது. மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. தயவுசெய்து கருணை காட்டி குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை ஐகோர்ட், கோவா செஷன்ஸ் நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பை ரத்து செய்து, தருண் தேஜ்பால் குற்றவாளி என்று அறிவித்தது. மேலும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தருண் தேஜ்பால் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தில் பேசிய முன்னாள் ஆசிரியரான தருண் தேஜ்பால், “நான் அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டவன். என் மீதான தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என்று தெரிவித்தார்.