அமித் ஷா அவைக்கு வர கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
1 min read
Opposition parties create ruckus in Rajya Sabha after Amit Shah asks to come to the House
6.8.2026
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளில் இருந்தே அமளி நீடித்து வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித் ஷா அவைக்கு வர வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பின. மேலும் பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேநேரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து காலை சுமார் 11.30 மணியளவில் அவை முதல் முறையாக நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, கேள்வி நேரம் தொடங்கப்பட்டாலும் எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்தது. உறுப்பினர்கள் அமைதியாக இருக்குமாறு அவைத்தலைவர் பலமுறை கேட்டுக்கொண்டதுடன், தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.அதன்பிறகு மல்லிகார்ஜுன கார்கேவை பேச அவைத்தலைவர் அழைத்தார்.
இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய நடவடிக்கை குறித்து அமித் ஷா நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தன.இதனால் அவை மீண்டும் பிற்பகல் 2.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பிற்பகல் 2.15 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவை நடவடிக்கைகளை மேலும் ஒரு மணி நேரத்திற்கு, அதாவது பிற்பகல் 3.15 மணி வரை ஒத்திவைத்தார்.
மக்களவையிலும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலையில் இருந்தே அமளி நீடித்த நிலையில், உறுப்பினர்கள் கடும் அமளிக்கு மத்தியில், வரி விதிப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.