தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு
1 min read
100,000 people affected by cancer annually in Tamil Nadu.
17.8.2026
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக மருத்துவத் துறை புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன. மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆண்டுக்கு புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயால் 53,542 பெண்களும், 46,555 ஆண்களும் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட வாரியான கணக்கெடுப்பில், தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 10,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகின்றன.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், ஆண்களுக்கு வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்களும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, பின்வரும் காரணங்களால் இந்த பாதிப்பு உயர்ந்துள்ளது.
உடற்பயிற்சி இன்மை மற்றும் துரித உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்பட்டுள்ளன. மேலும் புகையிலை, குட்கா மற்றும் மதுபானங்களின் பயன்பாடு அதிகரிப்பாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற காற்று மாசுபாடு மற்றும் அதீத மன அழுத்தம் காரணத்தாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், விழிப்புணர்வு குறைவால், 70% நோயாளிகள் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த எண்ணிக்கையைக் குறைக்க, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறியும் சிறப்பு முகாம்களை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. மாவட்டத் தலைமை ஆஸ்பத்திரிகளில் நவீன சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.