ரீல்ஸ் எடுக்க ரோட்டில் படுத்துக்கொண்டே வீடியோ எடுத்த இளம்பெண்
1 min read
Young woman lies down on the road to film a Reel.
23.8.2026
சமூக வலைத்தளங்களில் லைக்குகளை குவிப்பதற்காக, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் ஜீப்ரா கிராசிங்கில் படுத்து ரீல்ஸ் எடுத்த இன்ப்ளூயன்சர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரின் பரபரப்பான லான்டர்ன் சதுக்க பகுதியில் போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றிருந்தன. அப்போது, பிரகிருதி கவுர் என்ற சமூக ஊடக இன்ப்ளூயன்சர் இளம்பெண், திடீரென சாலையின் நடுவே உள்ள ஜீப்ரா கிராசிங் பாதையில் படுத்து கொண்டு, ரீல்ஸ் வீடியோவிற்காக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடுரோட்டில் படுத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்தூர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, அந்த பெண் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சிக்னலில் சிவப்பு விளக்கு எறிந்த போது வாகனங்கள் நின்றிருந்த சில நொடளிகளில் மட்டுமே இதை எடுத்ததாகவும், வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பொது இடங்களில் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது.