June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்

Tamil Nadu draft voter list release: 4 days special camp for revision

29.10.2024
தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும், வாக்காளர் உதவி மையம் அல்லது ஆன்லைன் மூலமாக மாற்றம், திருத்தம் உள்ளிட்டவறை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“* 2025 ஜனவரியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • 29.10.2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், வாக்காளர் பட்டியலின் 2 நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.
  • புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 3,07,90,791, பெண்கள் – 3,19,30,833, மூன்றாம் பாலினத்தவர் – 8,964)
  • மாநிலத்திலேயே உயரளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் 27.சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது (ஆண்கள் -3,38,183, பெண்கள் – 3,37,825, மூன்றாம் பாலினத்தவர் -125)
  • மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் 164.கீழ்வேளுர் தொகுதி உள்ளது. (ஆண்கள் -85,065, பெண்கள் – 88,162, மூன்றாம் பாலினத்தவர் – 3)
  • வரும் நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.