பாளையங்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை
1 min readA mercenary worker hacked to death at Palayankottai
23/3/2020
பாளையங்கோட்டையில் வாலிபர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கூலித் தொழிலாளி
நெல்லை அருகே பாளையங்கோட்டையை அடுத்த மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் முருகானந்தம் (வயது 33). இவரது மனைவி பிச்சம்மாள் (25). இவர்களுக்கு சுவேதா (7) என்ற மகளும், வலதி (5) என்ற மகனும் உள்ளனர்.
முருகானந்தம் கூலித்தொழிலாளி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 18.11.2018 அன்று பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பால்துரை (20) என்பவர் பாலாமடையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அவர் அதன்பின் வழக்கு விசாரணையில் சரிவர ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு நெல்லை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பின் அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
வெட்டிக்கொலை
இதைத்தொடர்ந்து அவர் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் தினமும் நெல்லை கோர்ட்டுக்கு சென்று கையெழுத்து போட்டு வந்தார்.
இன்று(திங்கட்கிழமை) காலை வழக்கம் போல் அவர் கையெழுத்திட சென்ற போது பல்வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவரது மனைவி பிச்சம்மாளும் உடன் சென்றார். இதைத்தொடர்ந்து மனைவி மற்றும் மகன் வலதி ஆகியோரை அழைத்து கொண்டு தனது மொபட்டில் கோர்ட்டுக்கு சென்று கையெழுத்திட்டார்.
பின்னர் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் முருகானந்தம் ஓட்டி வந்த மொபட்டை மோதி கீழே சாய்த்தனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகானந்தம் சுதாகரிப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் மனைவி, மகன் கண்முன்னே அந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. பின்னர் கொலைக் கும்பல் தப்பி ஒடிவிட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மனைவி, மகன் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை நடந்தது ஏன்?
2018-ம் ஆண்டு நடைபெற்ற பால்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர் தரப்பினர் முருகானந்தத்தை கோர்ட்டுக்கு வரும் போது கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதை அறிந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
எனினும் பிடிவாரண்டு பிறப்பித்ததையடுத்து கோர்ட்டில் கையெழுத்திட வந்தார். இதை அறிந்த எதிர் தரப்பினர் முருகானந்தத்தை பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரிய வந்தது.