சென்னையிலிருந்து ஆட்டோவில் நெல்லை வந்த குடும்பத்தினர்
1 min read4.5.2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் அனுமதியின்றி சாலைகளில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு மாநகராட்சியிலிருந்து அனுமதிக்கப்பட்ட நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை காலை 6 முதல் மதியம் 1 மணி வரை வாங்கி செல்லலாம். தடை மீறி சாலைகளில் சுற்றிதிரிவோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு தச்சநல்லூர் செக்போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு குடும்பத்தினர் மேலப்பாளையம் நாச்சியார் காலனியை சேர்ந்தவர்கள் என்பதும், சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த குடும்பத்தினரை மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.