கிருபானந்த வாரியாரின் நகைச்சுவை தோரணம்-3
1 min read
Krishnananda Warrior’s Joke-3
திருமுருக. கிருபானந்த வாரியார் கோவில் ஒன்றில் தொடர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். முதல்நாளில் கோவிலில் கிடா பலியிடும் பழக்கத்தைப் பற்றி சற்று வருத்தத்தோடு தன் உரையில் கூறினார். கோவிலில் கிடா வெட்டிப் பலியிடுவது சரியான செயல் அல்ல என்ற கருத்தில் பேசினார்.
இதைக்கேட்ட கேள்விப்பட்ட சில பிரபலங்கள் கொதித்து எழுந்தனர்.
“அவர் இஷ்டத்துக்கு பேசுவதா ஆயிரமாயிரம் காலங்களாக கிடா வெட்டி பலியிடும் வழக்கமும் ஆட்டுக்கறியைச் சாப்பிடும் பழக்கமும் இருந்து வருகிறது. கறி வெட்டக்கூடாது சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்?” என்று கேட்டார்கள்.
“கோவிலில் வருஷத்துக்கு ஒரு கிடா வெட்டுகிறோம். அதைக்குறை கூறும் வாரியார் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டும் கடைகளில் போய் வெட்ட வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே?” என்றும் கூறினார்களாம்.
அவர்கள் இப்படிக் கேட்டது வாரியார் சாமிகளின் காதுக்கு சென்றது.
மறுநாள் தன்னுடைய சொற்பொழிவின் போது வாரியார் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு சொன்னார்.
கோவில் கொடிமரத்தின் கீழ் ஒருவன் அமர்ந்து காலைக் கடன் கழித்துக் கொண்டிருந்தான். “தம்பி ஏன்டா கோவில் கொடி மரத்தின் கீழ் அமர்ந்து காலைக்கடன் கழிக்கலாமா?”என்று கேட்டேன். அவன் “ஏன் சாமி நான் ஒருவன் தானே இங்கே கழிக்கிறேன். அதோ அங்கு பாருங்கள் அந்த கழிப்பறையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த காரியத்தை தான் செய்கிறார்கள். அவர்களைப் போய்த் திருத்துங்கள். காலைக்கடன் கழிக்க கூடாது என்று நிறுத்துங்கள்” என்று சொல்வது எப்படியோ அதைப் போலத்தான் இது கறிக்கடையில் செய்ய வேண்டிய வேலையைக் கோவிலில் செய்யக் கூடாது என்றுதான் சொன்னேனே தவிர ஆட்டை வெட்டக்கூடாது என்று சொல்லவில்லை.இவ்வாறு கிருபானந்த வாரியார் கூறினார்.