ஏரல் அருகே பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை
1 min readஏரல் அருகே இரவில் பயங்கரம்
பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை
3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
Two people were killed, including a woman3.7.2020
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிவகளை பரம்பு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). விவசாயி. இவரது மனைவி முத்துபேச்சி (42). இவர்களுக்கு ஆத்திமுத்து (22), விக்னேஷ் ராஜா (21) என இருமகன்கள். இதில் பட்டப்படிப்பு முடித்துள்ள இளைய மகன் விக்னேஷ்ராஜா, அருகேயுள்ள பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் ராஜாவும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் கசமுத்துவின் மகனும் நடமாடும் வாகன பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருபவருமான அருண் (21) என்பவரும் நேற்று இரவு 8 மணிக்கு சிவகளை ரைஸ்மில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் இருவரையும் மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டத் துவங்கினர். இதில் பலத்த வெட்டுப்பட்ட அருண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனிடையே வெட்டுக்காயங்களுடன் அங்கிருந்து தப்பியோடிய விக்னேஷ்ராஜா, தனது வீட்டிற்குள் சென்று தஞ்சம் புகுந்தார். இதை பார்த்து பதறிய பெற்றோர் லட்சுமணனும், முத்துபேச்சியும் வீட்டை விட்டு வெளியே வந்தபோது அவர்களை துரத்திச் சென்ற மர்மநபர்கள், அருகேயுள்ள பரம்பு பாலம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பேச்சி பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த எஸ்பி ஜெயக்குமார், திருச்ெசந்தூர் டிஎஸ்பி பரத் மற்றும் ஏரல் போலீசார், முத்துபேச்சியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிய லட்சுமணன், அவரது மகன் விக்னேஷ் ராஜா இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அருணையும் மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அருண் பரிதாபமாக இறந்தார்.
ஏரல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதோடு தப்பியோடிய மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.