கயத்தாறு அருகே லோடு ஆட்டோவை மோத விட்டு வியாபாரி கொலை
1 min read
8.7.2020
Dealer killed by collision with Auto near Kayatharகயத்தாறு அருகே லோடு ஆட்டோவை மோத விட்டு பழ வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருக்கு போட்டியாக பழங்கள் விற்ற மற்றொரு வியாபாரி சிக்கினார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடப்பட்டி சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சண்முகய்யா மகன் முத்துபாண்டி (32). கொய்யாப்பழ வியாபாரி. இவர் கோவில்பட்டி – பசுவந்தனை ரோட்டோரத்தில் சிறிய கூடாரம் அமைத்து கொய்யாப்பழங்களை விற்று வந்தார். இதற்காக இவர் தினமும் அதிகாலையில் ஊரில் இருந்து பைக்கில் கயத்தாறு பகுதிக்கு சென்று, தனியார் தோட்ட உரிமையாளர்களிடம் கொய்யாப்பழங்களை வாங்கிக் கொண்டு, கோவில்பட்டிக்கு வந்து விற்பனை செய்து வந்தார்.மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக முத்துபாண்டி கோவில்பட்டிக்கு செல்லவில்லை. ஜூன் முதல் வாரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மீண்டும் கோவில்பட்டிக்கு கொய்யாப்பழம் விற்க சென்றார். அப்போது அங்கு கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதிபாண்டி (19) என்பவர் பழங்கள் விற்பனை செய்ததை பார்த்தார். அவரிடம் முத்துப்பாண்டி, இந்த இடம் நான் பல ஆண்டுகளாக கொய்யாப்பழங்களை விற்ற இடம். எனவே நீங்கள் வேறிடத்தில் விற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதில் 2 பேருக்கு தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து முத்துப்பாண்டி கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பசுபதிபாண்டியனை வேறிடத்தில் கொய்யாப்பழங்கள் விற்கும்படி கூறினர். இதனால் முத்துப்பாண்டி மீது பசுபதிபாண்டியனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று காலை 5.30 மணி அளவில் கயத்தாறு அருகே அய்யனாரூத்து அருகே முத்துப்பாண்டி பைக்கில் சென்ற போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை முதலில் விசாரித்த கயத்தாறு போலீசார் விபத்து என்றே நினைத்தனர். ஆனால் முத்துப்பாண்டி மனைவி முத்துப்பேச்சி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, முத்துப்பாண்டி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் போட்டியில் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலமாகின.
அதாவது கோவில்பட்டி போலீசிடம் கூறி தன்னுடைய பழக்கடையை காலி செய்ய வைத்த முத்துப்பாண்டியை படுகொலை செய்ய பசுபதிபாண்டி திட்டமிட்டார். இதற்காக முத்துப்பாண்டி அதிகாலையில் எங்கு பழம் வாங்க வருகிறார்? எந்த ரோட்டில் வருகிறார்? எத்தனை மணிக்கு வருகிறார்? என்பதையெல்லாம் அவருக்கு தெரியாமல் பசுபதிபாண்டி நோட்டமிட்டார். மேலும் நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அசோக்குமார் என்பவரது லோடு ஆட்டோவை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு பேசியதோடு அய்யனாரூத்து பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பசுபதிபாண்டி தங்கியிருந்தார்.நேற்று அதிகாலை வழக்கம் போல் கயத்தாறு – தேவர்குளம் சாலையில் கொய்யாபழங்கள் வாங்குவதற்காக முத்துப்பாண்டி பைக்கில் வந்து கொண்டிருந்தார். இதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்ட பசுபதிபாண்டி, லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டியபடி வந்தார். அய்யானாரூத்து அருகில் முத்துப்பாண்டி வந்த போது, அவரது பைக் மீது லோடு ஆட்டோவை மோத விட்டார். பைக்கிலிருந்து கீழே விழுந்த முத்துப்பாண்டி மீது மீண்டும் அவர் ஆட்டோவை ஏற்றியுள்ளார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.முத்துப்பாண்டி இறந்ததை உறுதிப்படுத்தியவாறு அதே லோடு ஆட்டோவில் பசுபதிபாண்டி தப்பிக்க முயன்றார். ஆனால் லோடு ஆட்டோ பழுதானதால், அதை அப்படியே விட்டு விட்டு பசுபதிபாண்டி தப்பியோடினார்.
இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, முத்துபாண்டி மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடிவந்தார். இந்நிலையில் நேற்றிரவு கயத்தாறு அருகே முத்துப்பாண்டி போலீஸ் பிடியில் சிக்கினார். இந்த சம்பவத்தில் முத்துப்பாண்டிக்கு மட்டும் தொடர்பு உண்டா? அல்லது வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.