சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு
1 min read9.7.2020
CBI case record over sathankulam incidentசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக சிபிஐ எஸ்பி வழக்குப்பதிவு செய்துள்ளார். கூடுதல் எஸ்பி வழக்கு குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசாரால் கடந்த மாதம் 19ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பென்னிக்ஸ் 22ம் தேதி இரவும், அவரது தந்தை ஜெயராஜ் 23ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தந்தை, மகன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ் முத்துராஜ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினார். அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, வியாபாரிகள் ெஜயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் லத்தியால் தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே வழக்கு விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட்டை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், போலீஸ் மகாராஜா விசாரணைக்கு இடையூறு செய்யும் வகையில் அவதூறாக பேசியதாகவும் மாவட்ட நீதிபதி மூலம் மதுரை ஐகோர்ட் கிளைக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கை அளித்தார். இதையடுத்து ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். போலீஸ் மகாராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியதால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மதுரை ஐகோர்ட் கிளையின் அனுமதியை பெற்று சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதே நேரத்தில் சிபிஐ இந்த வழக்கை ஏற்கும் வரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து சிபிசிஐடி இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்தது.
உடனே தூத்துக்குடி வந்த சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் சிபிசிஐடி விசாரணையை முடுக்கி விட்டனர். சாத்தான்குளம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 12 குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், வியாபாரிகள் வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனினும் பென்னிக்ஸ் கடைக்கு அருகில் இருந்த சிசிடிவி பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் வியாபாரிகள் கொலைக்கு ஆதாரமாக சிபிசிஐடி போலீசாரால் திரட்டப்பட்டது. சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினர், பென்னிக்ஸ் நண்பர்கள், சாத்தான்குளம் போலீசார், ப்ரண்ட்ஸ் ஆப் போலீசார், மருத்துவ சான்று அளித்த அரசு டாக்டர் என பலரிடமும் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் நேற்று சாத்தான்குளம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 5 பேரை கொலை வழக்கில் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர், உள்பட 10 பேர் நேற்று வரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ எஸ்பி தன்மயா பெகரா நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளார். ஜூலை 2ம் தேதி பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ‘சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல்’ ஆகிய சம்பவங்கள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடம் சாத்தான்குளம் போலீஸ் நிலையம் எனவும், இதுகுறித்து கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சங்கர், ேகாவில்பட்டி போலீசில் புகார் அளித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விஜய் குமார் சுக்லா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கிற்கான எதிரிகள், ‘தெரியாத நபர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ வழக்குபதிவு செய்துள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் தங்களிடம் உள்ள முதல் தகவல் அறிக்கை, வழக்கிற்காக திரட்டிய ஆதாரங்கள் ஆகியவற்றை விரைவில் சிபிஐயிடம் ஒப்படைப்பர் என ெதரிகிறது.
====