கர்ப்பிணி சிறுமி தற்கொலை- காதலன் கைது
1 min read9.7.2020
Pregnant girl commits suicide – boyfriend arrestedமணப்பாறை காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்ட சிறுமி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிறுமியின் காதலன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கவரப்பட்டியை சேர்ந்த தம்பதி பழனிச்சாமி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன், 2 மகள் இருந்தனர். 4வது மகள் அன்னக்கிளிக்கும் (17), அவரது உறவுக்காரரான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி(22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்ததால் சிறுமி கர்ப்பமானார்.
இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கூறியுள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்த ராம்கி சிறுமியையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீதி கடந்த மே மாதம் 29ம் தேதி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராம்கியை தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பாறை டி.எஸ்.பி. அலுவலகம் சென்று புதிதாக பொறுப்பேற்று கொண்ட டிஎஸ்பி பிருந்தாவிடமும் புகார் மனு அளித்தார். ஆனாலும் ராம்கியை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்து நேற்று முன்தினம் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு 5 மாத கர்ப்பிணியான சிறுமியும், அவரது தாயாரும் தர்ணாவில் ஈடுபட்டனர். மகளிர் போலீசார் அவர்களை சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்கி திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இதையறிந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, எஸ்.பி ஜியாஉல்ஹக் ஆகியோர் மணப்பாறை காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இதுபற்றி ஐஜி ஜெயராமன் கூறுகையில், ராம்கி முன்ஜாமீன் பெற்ற விவகாரம் அறிந்து சிறுமி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீசார் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து நேற்றிரவு ராம்கியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.