10 ஆண்டாக தலைமறைவான ரவுடி கைது
1 min read28.8.2020
Rowdy arrested for 10 years in hidingநெல்லை மாவட்டம் பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் கொம்பையா (40). இவர் மீது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இவர் மீது 40க்கும் மேற்பட்ட பிடிவாரன்ட்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இவரை பிடிக்குமாறு எஸ்.பி. மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம், கூடலூரில் கொம்பையா பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாவட்ட தனிப்பிரிவு எஸ்ஐ இசக்கி மற்றும் சேரன்மகாதேவி உட்கோட்ட தனிப்பிரிவு எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் கூடலூர் சென்று கொம்பையாவை கைது செய்தனர். அவரை சேரன்மகாதேவி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கொம்பையா குறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
பல்வேறு வழக்குகளில் ஆஜர் ஆகாமல் இருந்துவந்த கொம்பையா, மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூடலூரில் பதுங்கி இருந்துள்ளார். அங்குள்ள பால்பண்ணையில் வேலை பார்த்த அவர் தில்லுமுல்லுவில் ஈடுபடவே வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 7 ஆண்டாக அங்குள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பின்னர் ரவுடி கொம்பையா, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.