கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 0.29 சதவீதம் பேருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை
1 min readVentilator treatment for 0.29 percent of corona sufferers
29-8-2020
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 0.29 சதவிகிதம் பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
உயர்மட்டக்குழு கூட்டம்
கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தலைமையில் பல்வேறு துறை மந்திரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டம் டெல்லியில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:-
வென்டிலேட்டர்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து செயல்படுவது திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 0.29 சதவிகிதத்தினர் மட்டுமே செயற்கை சுவாசக்கருவியான வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் 1.93 சதவிகிதத்தினர் உள்ளனர். 2.88 சதவிகிதத்தினர் ஆக்சிஸன் கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சம் மாதிரிகள் (சாம்பில்கள்) பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, பாராளுமன்ற,சட்டமன்ற கூட்டத்தொடர்கள் கூடிய விரைவில் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடர்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள எம்பவர்டு குரூப் 1 தலைவர் விகே பால் கூறும்போது, “பாரத் பயாடெக்கின் கொரோனா தடுப்பூசி மற்றும் சிங்டஸ் கடிலா தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. சீரம் இன்ஸ்டிடியுட்டின் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 3 ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளது” என்றார்.