2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க தடை?
1 min readProhibition to stand in panchayat elections if having more than 2 children?
30-8-2020
உத்தரபிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க தடை விதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பஞ்சாயத்து தேர்தல்
உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த அரசு அதிரடியான முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அந்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக நேற்று(சனிக்கிழமை) அந்த மாநிலப் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் பூபேந்தரா சிங் சவுத்ரி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 30 லட்சம் பேர் போட்டியிடுவர் . இதில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டால் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையினர்
அந்த மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பால் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை மந்திரியும் உத்தரபிரேசத்தை சேர்ந்தவருமான சஞ்சீவ் பலியான், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் அந்த மாநில அரசு மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது