April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரி அருகே கழுத்தை அறுத்து 2 பெண்கள் கொலை

1 min read

2 women killed by beheading near Nanguneri

27/9/2020

நாங்குநேரி அருகே காதல் திருமணத் தகராறில் 2 பெண்கள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர்.

காதல் திருமணம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாசலம். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் நாங்குநேரி பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (40).
சண்முகத்தாயும் சாந்தியும் உறவினர்கள். இவர்கள் 2 பேரும் அங்கன்வாடியில் பணியாளராக வேலை செய்து வந்தனர்.

நேற்று பகல் 12 மணி அளவில் அருணாசலம் வீட்டுக்கு 6 மோட்டார் சைக்கிள்களில் 12 பேர் கொண்ட கும்பல் திமுதிமு என்று வந்தது. அவர்கள் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தனர். முகத்தை அடையாளம் தெரியாமல் இருக்க துணியால் மூடி கட்டி இருந்தனர். அவர்கள் திடீரென்று நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டுகளை அருணாசலம் வீட்டின் மீது வீசினார்கள். அவைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதன் காரணமாக வீட்டின் முன்பக்க கதவும் அலமாரியும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அவர்களை பார்த்ததும் வீட்டில் இருந்த அருணாசலமும், அவருடைய மனைவி சண்முகத்தாயும் பின்பக்க வாசல் வழியே தப்பி ஓடினர். ஆனாலும் அவர்களை அந்த கும்பல் விரட்டிச் சென்றது. மேலும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியது.

சண்முகத்தாயின் முதுகில் குண்டு பட்டு அவர் கீழே விழுந்தார். பின்னர் சண்முகத்தாயை அந்த கும்பல் அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தது. பின்னர் சண்முகத்தாயின் தலையை எடுத்து சென்று ஊருக்கு மேல்புறம் உள்ள வாறுகாலில் தலையை வீசினர்.
தப்பி ஓடிய அருணாசலம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இன்னொரு கொலை

அதன்பின்னர் அந்தக் கொலை கும்பல் சுப்பையாவின் வீட்டுக்கும் சென்றது. அங்கும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதனால் அந்த வீட்டில் இருந்த சுப்பையாவின் மனைவி சாந்தி, மகள் செல்வி (13) ஆகிய 2 பேரும் அதிர்ச்சி அடைந்து தப்பியோட முயன்றனர். அதற்குள் அந்த கும்பல், வீட்டுக்குள் புகுந்து சாந்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதை தடுக்க முயன்ற செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்களில் தப்பிவிட்டது.

பட்டப்பகலில் ஊருக்குள் வீடுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபி தெரஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்த செல்வியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சண்முகத்தாய், சாந்தி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழி

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் காதல் திருமணத் தகராறில் பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலை நடந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சண்முகத்தாய்க்கு நம்பிராஜன் உள்பட 3 மகன்கள் இருந்தனர். நம்பிராஜன், அப்பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரே சாதியாக இருந்தாலும் இந்த திருமணத்திற்கு வான்மதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதல் திருமணம் செய்த நம்பிராஜனும், வான்மதியும் நெல்லை டவுன் மணிபுரம் பகுதியில் வசித்து வந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நம்பிராஜனை அவருடைய நண்பர்களான முத்துப்பாண்டி, செல்லத்துரை ஆகியோர் மதுகுடிக்க அழைத்து சென்று கொலை செய்துவிட்டனர். பிணத்தை ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்று விட்டனர்.

நம்பிராஜனை கொலை செய்தவர்களில் ஒருவரான செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் (50) நாங்குநேரி மெயின் ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். அவரையும் அவரது உறவினர் சுரேசையும் (20) கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. ஓட்டலுக்குள் சென்று இந்த கொலையை நடத்தினர்.
நம்பிராஜன் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆறுமுகமும், சுரேசும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த இரட்டைக்கொலையில் சுப்பையாவின் மகனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் நம்பிராஜனின் குடும்பத்தினரையும், சுப்பையாவின் குடும்பத்தினரையும் பழிவாங்க திட்டமிட்டனர். அதன்படி நம்பிராஜன், சுப்பையா ஆகியோரது வீடுகளில் நேற்று(சனிக்கிழமை) மர்மநபர்கள் மூலம் சண்முகத்தாய், சாந்தி ஆகிய 2 பேரையும் கொலை செய்துள்ளனர்..

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது. இந்த இரட்டை கொலை தொடர்பாக
தலைமறைவான கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.