திருமணமான 45 நாளில் புதுப்பெண் தற்கொலை; கணவர் கைது
1 min readNewlyweds commits suicide within 45 days of marriage; Husband arrested suicide; Husband arrested
23/10/2020
திருமணமான 45 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
திருமணம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் சபரிநாதன் (வயது 30). பொறியியல் பட்டதாரியான இவருக்கும், விருத்தாசலம் நகரத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரின் இரண்டாவது மகள் நிலா (22) என்பவருக்கும் கடந்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப்பின் நிலா வரம்பனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் மாமனார்-மாமியாருடன் வசித்து வந்தார். ஆனால் திருமணமான நாள் முதல் சபரிநாதன், மனைவி நிலாவிடம் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிலா மனவருத்தத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம்(புதன்கிழமை) நிலாவின் மாமனார், மாமியார் வெளியூர் சென்றுவிட்டனர். அவரது கணவரும் விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்தார். நிலா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார்.
காலை 11 மணி அளவில் கணவர் சபரிநாதன் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது நிலா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
நிலா தற்கொலை செய்தத தகவல் அறிந்த நிலாவின் தாயார் ஜெயந்தி, சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். இதக்கிடையே வேப்பூர் போலீசாருக்கும் தகவல் கிடைத்து அவர்கள் வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகார்
நிலாவின் தாயார் ஜெயந்தி, விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “எனது மகளின் திருமணத்தின் போது எல்லா சீர் வரிசைகளையும் செய்து கொடுத்தோம். ஆனால் திருமணமான ஒரு வாரத்தில் மாப்பிள்ளை வீட்டார் எனது மகளிடம் 40 பவுன் நகை கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். மேலும், எனது மகளிடம் அவரது கணவர் சரிவர பேசாததால் மன வருத்தம் அடைந்துள்ளார். திருமணமான 45 நாட்களே ஆன நிலையில் எனது மகள் தற்கொலை செய்து கொண்டதில், எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவர் சபரிநாதன் மற்றும் அவரது உறவினர்களை விசாரிக்க வேண்டும்.” என்று கூறப்பட்டு இருந்தது.
கைது
இதையடுத்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின்பேரில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக, சபரிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். திருமணமாகி ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.