ஊரடங்கில் மேலும் தளர்வுகள்; டிசம்பர் 7-ந் தேதி கல்லூரிகள் திறப்பு
1 min readFurther relaxations in curfew; Colleges open on December 7th
30/11/2020
தமிழகத்தில் டிசம்பர் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஆனால் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கல்லூரிகள் டிசம்பர் 7- ந் தேதி திறக்கப்படுகிறது.
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்திலும் பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இன்னும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்து டிசம்பர் 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7-ந்தேதி முதல் தொடங்குகிறது. கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகள் தொடங்குகிறது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
- விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- மருத்துவம், அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் டிசம்பர் 7-ந்தேதி முதல் தொடங்கும்.
- டிசம்பர் 14-ந்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
கூட்டங்கள் நடத்த அனுமதி
- டிசம்பர் 1-ந்தேதி முதல் உள்அரங்கங்களில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள் அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்.
- அரசியல், மதம், பொழுதுபோக்கு கூட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் ஆகியோரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.