புதிய படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு இல்லை; ஓடிடி-க்கு மவுசு கூடுகிறது
1 min readNew films are not welcome in theaters; Mausu adds to ODT
1/12/2020
தியேட்டர்களில் புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் ஓடிடி-க்கு மவுசு கூடுகிறது. 18 புதிய படங்களை ஓடிடி-யில் வெளியிடப்படுகிறது.
சினிமா தியேட்டர்கள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்பும் நடத்தப்படவில்லை.
பின்னர் ஊரடங்கில் கொடுக்கப்ட்ட தளர்வுகள் அடிப்படையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன. ஆனாலும் முக்கிய நடிகர்கள் பெரும்பாலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதன்பின் கடந்த மாதம் 10-ந் தேதி சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ரசிகர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உள்ளேயும் சமூக இடைவெளி விட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
வரவேற்பு இல்லை
சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. கூட்டம் இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன.
இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
நட்சத்திர அந்தஸ்து கதாநாயகர்கள் படம் ஏதும் தற்போது வெளியிடப்படவில்லை என்றாலும் தியேட்டர்களில் சாதாரண அளவுக்கு கூட கூட்டம் இல்லை.
தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் சினிமா காட்சிகளும் அவ்வப்போது ரத்து செயப்படுகின்றன.
ஓடிடியில்…
இதன் காரணமாக ஓடிடி-க்கு மவுசு கூடியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் பல படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. குறிப்பாக நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா நடித்த படங்கள் ஓடிடி-யில் வெளியிடப்பட்டன. இதற்கு திரை உலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இப்போது பலர் ஓடிடி பக்கம் திரும்புகிறார்கள்.
புது படங்களை ஓ.டி.டி. யில் வெளியிட்டால் படம் எடுக்க செலவழித்த பட்ஜெட்டைவிட லாபம் பார்க்கலாம், ரசிகர்களும் அதிகம்பேர் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்து விடுவார்கள் என்று கருதுகின்றனர்.
ஏற்கனவே சூர்யா நடித்த ‘சூரரைபோற்று’, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குயின்’, நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாயின. இதில் தயாரிப்பாளர்கள் லாபமும் பார்த்தார்கள்.
இதையடுத்து சுமார் 18 படங்களை ஓ.டி.டி.யில் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘பாரீஸ் பாரீஸ்’, ‘கர்ஜனை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘திகில்’, ‘ஜிந்தா’, ‘ஆட்கள் தேவை’, ‘மாமாகிகி’, ‘யாதுமாகி நின்றாய்’, ‘ஹவாலா’, ‘மதம்’ உள்பட 18 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து ஓ.டி.டி.யில் வெளிவர தயாராகி வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’, சித்தார்த் நடித்துள்ள ‘சைத்தான் கா பச்சா’, மாதவன் நடித்துள்ள ‘மாறா’ ஆகிய படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன.