மாடத்திலே கன்னி மாடத்திலே….( சொல் ஆராய்ச்சி / சிவகாசி முத்துமணி)
1 min readTamil Ilakkiyam- Sivakasi Muthumani
5-12-2020
மாடத்திலே கன்னி மாடத்திலே என்னும் ஒரு
சினிமாப் பாட்டு கேட்டிருப்போம். மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் என்று கதைகளில் படித்திருக்கிறோம். மாடப்புறா என்ற பறவையை இலக்கியங்களில் கதைகளில் சினிமா பாடல்களில் பயன்படுத்துகிறோம்.
மாட புறாவிலும் ஜோடிப் புறா உண்டு ஜோடியைப் பிரிந்தபின் வாழும் புறா இல்லையே!! என்று கண்ணதாசன் பாட்டையும் கேட்டிருக்கிறோம். கதை எழுதும்போது மாடமாளிகை கூட கோபுரம் என்றும் எழுதுவோம்.
மாடம் என்ற சொல்லின் பொருள் என்ன?.
மாடம் என்னும் சொல் பொதுவாக இன்று மாடி என்று நாம் சொல்லும் மேல் கட்டடம். அதைத்தான் அக்காலத்தில் குறித்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். மாடம் எனும் சொல் பிற்காலத்தில் மாடி,பிறகு அடுக்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இப்படி எல்லாம் என மாறி இருக்கலாம்.
ஏமாளி கோமாளி உன் மேல் வீடு காலி. உன் மேல் மாடி காலி என்று ஒருவரைக் கேலி செய்தால், அவருக்கு மண்டைக் காலியாக அதாவது மூளை இல்லாமல் இருக்கிறது. என்பது பொருள். மாடியை மேல்வீடு என்றும் சில பகுதிகளில் குறிப்பிடுகிறார்கள். ஒரு சில பகுதிகளில் மாடியை மெத்தை அல்லது மெத்து என்று அழைப்பதும் உண்டு. வீட்டின் தரை தளத்திற்கு மேலேயோ அல்லது எந்தத் தளத்திற்கு மேலேயும்மொட்டைமாடி என்ற பெயரும் பின்னாளில் ஏற்பட்டது.
தரைத் தளத்தின் மேல், ஒரே ஒரு தளம் மட்டும் அந்நாள்களில் ஏற்படுத்தப்பட்டு அதை மாடம் என்று அழைத்தார்கள் என்று எண்ணுகிறேன். ஒரே ஒரு மேல் தளம் கொண்ட பெரிய வீட்டை மாடமாளிகை என்று செல்வார்கள். பின்னர் தளங்கள் பல அமைக்கப்பட்ட கட்டடத்தை Multi storey buildings. பல அடுக்குகளைக் கொண்ட கட்டடம் அடுக்குமாடி கட்டடம் எனப்பட்டது.
அக்காலத்தில் அரண்மனை போன்ற கட்டடங்கள் கட்டப்படும் போது உயரமான பகுதிகளில், கட்டுமானப் பணியின்போது, கட்டடத்தில் ஆங்காங்கே கூடு போன்ற பகுதிகள் தோன்றிவிடும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காக பின்னாளில் திட்டமிட்டு அவ்வாறு கட்டினார்கள் என்று கொள்ளலாம். சில நேரங்களில் கட்டடத்தின் உறுதிக்காக அவை உருவாக்கப்படும். அவை மாடக்குழிகள் என்று அழைக்கப்படுகின்றன . மாடம் என்பது கட்டடத்தின் அடுக்குகளாக இருந்தால், அந்த அடுக்குகளில் ஏற்பட்ட குழி மாடக்குழி எனப்படும் அதற்குள் புறாக்கள் புகுந்து குடியிருக்கும். அப்புறாவை மாடப்புறா என்று கூறுவர். மாடத்தில் குடியிருப்பதால் மாடப்புறா.
மணிப்புறா மரகதப்புறா என்று புறாக்களில் பல வகைகள் இருந்தாலும் மாடப்புறா மரங்களில் கூடு கட்டாது. இதுபோன்ற உயரமான கட்டடங்களில் காணப்படும் குழிகளில் தான் குடியிருக்கும்.
அப்படியானால் உயரமான கட்டடங்களில் உள்ளே மறைந்துள்ள மாடங்களைத் தாம் தங்கிக்கொள்ள மாடப் புறாக்கள் பயன்படுத்திக் கொண்டன.
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா .. என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் மாடப்புறா கூடு கட்டுவதில்லை எனவே இப்பாடல் பொருள் தவறு என்று ஒரு விமர்சனம் வந்தது. ஆனால் அவர் அப்பாடலில் ஆலமரம் என்று உருவகமாகக் குறிப்பிட்டது ஒரு குடும்பம்.
வீடுகளில் குறிப்பிட்ட உயரத்திற்கு ஒரு பீடம் போல் ஏற்படுத்தி அதில் ஒரு சிறு பள்ளம் ஏற்படுத்திச் துளசியை வளர்ப்பர். அது துளசி மாடம் எனப்பட்டது.வீட்டின் உள்ளே சுவர்களில் குறிப்பிட்ட உயரத்தில், ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி அதில் விளக்கு ஏற்றுவார்கள். அதை விளக்கு மாடம் என்று அழைப்பர், நெல்லை மாவட்டத்தில் அதை மாடக்குழி அல்லது விளக்குழி என்று சொல்வார்கள். விளக்கு மாடம் என்று சொல்வதை விட மாடக்குழி என்று சொல்வதுதான் பொருந்தும். அந்தக் குழிக்குள்ளே விளக்கு ஏற்றுவர்.இன்று நாம் அக்கால கோவில்கள் குள்ளே காணலாம் விளக்கு ஏற்றும் குழிகளை.
கன்னி மாடம் என்று
கேள்விப்பட்டிருப்போம்.
அரண்மனையில் இளவரசி தோழியர் போன்ற திருமணமாகாத, இளம் பெண்கள் அமர்ந்து கொண்டு என்ன, தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடலரங்கில் , நடைபெறும் நடனம், நாட்டியம் போன்ற நிகழ்வுகளைக் கண்டு ரசிப்பதற்கு வசதியாக, உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இடம் கன்னி மாடம் எனப்பட்டது. கீழே நடக்கிற நடனத்தை நாட்டியத்தை அவர்களால் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் அங்கே அமர்ந்திருப்பது கீழிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஆடும் கலைஞர்கள் கூட பார்க்க முடியாது. அரண்மனைப் பெண்களை அடுத்தவர் பார்க்க கூடாது என்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தான் உப்பரிகை என்று குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன். மிதிலையில் ராமன் நடை அழகை உப்பரிகையில் இருந்து தான் சீதை பார்த்து ரசித்து வியந்து போனாள். இதுதான் இன்னும் பிற்காலத்தில் பால்கனி என்று மாற்றப்பட்டது என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.பால்கனி என்ற இந்த அமைப்பை அக்காலத் திரையரங்குகளில் பார்க்க முடியும். பால்கனியில் இருந்து படம் பார்ப்பவரைத்தரைத்தளத்தில் அமர்ந்து படம் பார்ப்போர் பார்க்க இயலாது.
பொதுவாக உயர்ந்த கட்டடச் சுவர்களில் ஆங்காங்கே செவ்வக அல்லது சதுர வடிவங்களில் உள்வாங்கிய நிலையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்குப் பெயர் மாடம் என்று இருக்கலாம்…
கொத்தளம் என்பது கோட்டைச் சுவருக்கு வெளியே புடைத்துக் கொண்டு இருக்கும் அமைப்பு… மாடக்குழி என்பது அதற்கெதிராக சுவர்களில் இருந்து உள்வாங்கி இருக்கும் அமைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது…
உள்+பரிகை.. என்னும் சொல்லும் உள்வாங்கிய என்று எதையோ குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது அல்லவா?.
இதுவே இறுதியான முடிவன்று. என் சிந்தனைக்கு எட்டியவை. அவ்வளவுதான். மாடசாமி எனும் தெய்வத்தின் பெயர் கூட அப்படி ஏற்பட்டதாக இருக்கலாம் ஒரு பெரிய மாடத்திற்குள் அவர் அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கலாம். அதனால் மாடசாமி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
அல்லது நின்ற கோலத்திலும் அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு பீடம் மட்டும் அதாவது உயரமான ஒரு திட்டு மட்டும் அமைத்து அதன்மேல் வெட்ட வெளியில் நிற்கிற தெய்வச் சிலைகளையும் காண்கிறோம். பீடம் என்பது சற்று உயர்வானது.
சமவெளியை விட சற்று உயரமானது பீடபூமி என்று சொல்லுகிறோம் அல்லவா. உயர்ந்த அதாவது பள்ளத்தாக்கிற்கு எதிர்ச்சொல். அவற்றிற்குப் புறம்பாக மாடத்திற்குள் அமைக்கப்பட்டதாக இருக்கலாம் மாடசாமி உருவங்கள்… இதுவும் இறுதியான உறுதியான முடிவு அன்று. சிந்தனைக்கு எட்டியதைச் சொல்கிறேன்.
மாடவீதி என்பது கோவில் இருக்கும் தெருவைக் குறிக்கிறதா? சிவன் மாட வீதி என்று சொன்னால் சிவன் கோவில் இருக்கும் தெருவா? உயரமாக இருப்பதால் கோவில் கோபுரம் அமைந்த தெருவை சொல்லால் குறிப்பிட்டுள்ளனர் என்று கருதலாம்.
மாட்டு எனும் சொல்லுக்கு இடம் அல்லது பக்கம் என்னும் பொருள்கள் உண்டு.
” இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு..
“
எவன் நல்ல வழியில் பொருள் தேடி இன்பம் துய்த்து புகழ்பட வாழ்ந்து கொண்டிருக்கிறானோ அவன் பக்கத்தில் இறைவன் இருப்பார்… அவனுக்கு துணையாக அவன் அருகிலேயே இருப்பார்.
“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு….”
பொதுவாக இரத்தலை இழிவு என்று சொல்லும்வள்ளுவன் யாரோ ஒருவரிடம் மட்டும் இரப்பது கூட ஈதலுக்குச் சமமானது, என்று கூறுகிறார். தன்னால் இயன்ற செயலை செய்வதற்கோ, பொருளைக் கொடுப்பதற்கும் கனவிலும் மறுக்காதே ஒருவனிடம் சென்று யாசகம் கேட்பது கூட ஈதலுக்கு இணையான புண்ணியம் ஆகும் என்று கூறுகிறார்.
இந்த இரண்டு பாடல்களிலும் மாட்டு என்பது இடத்தில் பக்கத்தில் என்று பொருள்படுகிறது.
இந்த அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் தலைமாட்டில் உட்கார்ந்தான். கால்மாட்டில் அமர்ந்தான் என்று எனும் சொல்லை அருமையாகப் பயன்படுத்துவார்கள். “இந்தா படுக்கும்போது இதை தலைமாட்டில் வைத்துக் கொள் தலைவலி பறந்துவிடும்”என்று சொல்லி மருந்து கொடுப்பது உண்டு. பிறகு அச்சொற்கள் தலைமாடு, கால்மாடு என்று திரிந்து வழங்கப்பட்டு வருகிறது. அவசரத்தில் உனக்கு தலை மாடு எது கால் மாடு எது என்று தெரியவில்லை….
மாடன் என்னும் சொல்லிலிருந்து மாடசாமி எனும் சொல் வந்தது. மாடனை காடனை என்று பாரதியார் பாடி இருக்கிறார். மாடன் என்ற தெய்வத்தோடு சாமி என்பதை சேர்த்து மாடசாமி, கந்தன் என்னும் தெய்வத்தோடு சாமி சேர்த்து கந்தசாமி, குப்பன் எனும் இறைவன் பெயரோடு சாமி சேர்த்து குப்புசாமி இப்படித்தான் பெயர்கள் சூட்டப்பட்டன. அந்தப் பெயரிலேயே வணங்கினோம்.
சமூகத்தில் நிலவி வந்த ஏற்றத்தாழ்வு காரணமாக, மேல்தட்டு மக்கள் தம் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தால் குப்புசாமி என்றும் கீழ்தட்டு மக்கள் குப்பன் என்றும் பெயர் சூட்டிக் கொள்ளும் நிலைமை.
பிள்ளையார் மாடம் என்ற சொல்லும் வழக்கில் இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. வீட்டில் பூஜையறை போல, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் சுவரில் பள்ளம் இடப்பட்டு அதன் உள்ளே பிள்ளையார் திருவுருவத்தை வைத்து விடுவார்கள். அதை பிள்ளையார் மாடம் என்று அழைக்கும் பழக்கம் இருந்திருக்கலாம்.
விளக்கு மாடம், பிள்ளையார் மாடம், துளசி மாடம், கன்னி மாடம், மாடப்புறா, மாடமாளிகை…. இச் சொற்களைக் கொண்டு என் அறிவிற்கு எட்டியவரை வேறு எதையும் புரட்டிப் பார்க்காமல்.. ஆய்ந்து சொல்லி இருக்கிறேன். இக்கருத்தில் மாறுபாடு உடையவர்களும்… அவரவர் கருத்தை வெளியிடலாம். நான் சொன்னதே இறுதி அன்று.
சொல்லாராய்ச்சி மொழி வளர்ச்சிக்கு அடித்தளம்.
-க. முத்துமணி