தமிழகத்தில் கனமழை எங்கெல்லாம் பெய்யும்?- வானிலை மையம் அறிவிப்பு
1 min readWhere is the heavy rain in Tamil Nadu? – Weather Center announcement
5/12/2020
வளைகுடா பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் எந்தெந்த பகுதியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புரெவி புயல்
வங்கக்கடலில் கடந்த மாதம் 24-ந் தேதி உருவான நிவர் புயல் புதுவை அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் வட மாட்டங்களில் மழை பெய்தது.
இதை அடுத்து உருவான புரெவி புயலால் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் இலங்கையில் கரையை கடந்த அந்தப் புயல் மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறியது. அது தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டு உள்ளது. ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலூர், சென்னை உள்பட வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குகிறது.
கேரளாவை நோக்கி…
வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று அது மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் இடங்கள்
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தாலும் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழையும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் நாளை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.