கடலூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கனமழை
1 min read5th day of heavy rain in Cuddalore district
6/12/2020
கடலூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கனமழை பெய்தது.
கடலூரில் மழை
கடந்த மாதம் இறுதியில் நிரவி புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தில் மழை கொட்டியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. தென்மாட்டங்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் என்று எதிர்பார்த்த நிலைியல் இந்த புரெவி புயல் வலுவிழுந்து பலத்த மழை கொட்டி கடலூரை கடல் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது.
சிதம்பரம்
சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிதம்பரம் பகுதியில் ஒரே நாளில் 36 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. அந்த பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளையும் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. கோவிலில் சிவ காம சுந்தரி சமேத நடராஜ பெருமாள் வீற்றிருக்கும் சித்சபை பிரகாரத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவிலில் இருந்து மழைநீர் வெளியேறும் சுரங்க பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தான் கோவிலுக்குள் மழைநீர் குளம் போல் தேங்கியது என கூறப்படுகிறது. நடராஜர் கோவில் உட்புற வளாகத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமயிலான அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கோவிலில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
5-வது நாளாக…
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவு போல ஆனது. அந்த பகுதி மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தத்தளித்தனர்.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்பு குழுவினர் மீட்டனர். அவர்களை 382 பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் 2 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்தது. இதில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இது தவிர வாழை, மணிலா, கரும்பு, காய்கறி செடிகளும் பாதிப்படைந்துள்ளன.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. கன மழைக்கு 4 பேர் இறந்துள்ளனர். 778 வீடுகள் சேதமடைந்துள்ளன.