தாமிரபரணி ஆற்று மணலில் கனிமங்கள்- ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
1 min readMinerals in Tamiraparani river sand – High court order to study
17/12/2020
தாமிரபரணி ஆற்று மணலில் கனிமங்கள் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அணுசக்தி துறை நிபுணர்கள் ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில், “தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு விசாரித்து வருகிறது.
ஆய்வு செய்ய உத்தரவு
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். அந்த வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கையானது இன்று( வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தாமிரபரணி ஆற்று மணலில் அணுசக்தி கனிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, “கனிமங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள், எவ்வாறு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை கூறி, மத்திய அணுசக்தி செயலர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணலை எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுத்த மணலை கட்டுமான பணிக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து, வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.