இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு
1 min readTransformed corona exposure in India rises to 25
31.12.2020
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்ந்துள்ளது.
உருமாறிய கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் இங்கிலாந்தில் இருந்து வந்த உருமாறிய கொரோனா காலடி பதித்துள்ளது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்துள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதில் நேற்று நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களுடைய மாதிரிகளின் ஆய்வு முடிவுகளும் படிப்படியாக வெளியிடப்படுகின்றன.
மேலும் 5 பேருக்கு
இந்த நிலையில் இன்று காலை மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 25 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் 25 பேரும் ஆஸ்பத்திரிகளில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.