கடையம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் சாவு
1 min readTeen girl dies in river floods near Kadayam
8.1.2021
கடையம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி இளம் பெண் இறந்தார். 2 பேர் உயிர் தப்பினர்.
ஆற்றில் குளிக்க…
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஏ.பி.நாடானூர் குமரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா (வயது 18), சுடலைவள்ளி (21) என 2 மகள்கள். சுப்பிரமணியன் (27) என்ற மகன் இருக்கிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் சுடலைவள்ளிக்கும் கடகநேரியைச் சோந்த சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அபிநயா கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
அபிநயா, சுடலைவள்ளி, அவருடைய கணவர் சதீஷ், சதீசின் தங்கை இன்ஷியா (18), அபிநயா சித்தப்பா மகள் இன்பசுபா (11) ஆகிய 5 பேரும் பாப்பான்குளம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.
இழுத்துச் சென்றது
அவர்கள் ஆற்றில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று வெள்ளம் அதிகமாக வந்ததாக தெரிகிறது. இதில் சுடலைவள்ளி, அபிநயா, இன்பசுபா ஆகிய மூவரையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்து பதறிப்போன உறவினர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் சுடலைவள்ளியும், இன்பசுபாவும் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் அபிநயா ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலைத்தான் மீட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, அபிநயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்