தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
1 min readChance of rain in the southern districts
20.1.2021
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர் மழை கொட்டியது. கடந்த 3 தினங்களாகத்தான் வெயில் தலைகாட்டுக்கிறது. இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை
நாளை தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும் காணப்படும். வருகின்ற 22ந் தேதி முதல் 24ந் தேதி வரை தமிழகம் , புதுவை , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.