மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை
1 min read49-year jail term for teacher who sexually harassed students
19.1.2021
மாணவிகளை பாலியலில் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆசிரியர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நரியன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வந்தவர் அன்பரசன் (வயது 52). அதே பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஞானசேகரன் (50).
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரை அன்பரசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் நேற்று(திங்கட்கிழமை) நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு அளித்தார். இதில் ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், வன்கொடுமையை வெளியில் சொல்லாமல் இருக்க மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இதனை ஏக காலத்தில் (7 ஆண்டுகள்) அனுபவிக்கவும் தீர்ப்பு கூறினார்.
மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவின் கீழ் தலா 7 ஆண்டுகளும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், இதனை தொடர்ச்சியாக தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டுகள் மற்றும் 42 ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 49 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியர்
இதேபோல உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் ஒன்றைரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.