April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஊரடங்கு பிப்ரவரி 28ந் தேதி வரை நீடிப்பு; 8-ந் தேதி 9,11ம் வகுப்புகள் திறப்பு

1 min read

Curfew in Tamil Nadu extended till February 28; Classes 9 and 11 will open on the 8th

31.1.2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 8ந் தேதி முதல் 9, 10 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ந் தேதி பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தற்போதுள்ள ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற பிப்ரவரி 28ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கல்லூரிகள் திறப்பு

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

சினிமா தியேட்டர்கள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 1.2.2021 முதல்செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், 1.2.2021 முதல், நடத்த அனுமதிக்கப் படுகின்றன.
திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளைபொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நடைமுறை தொடரும்.

கிரிக்கெட்

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால்நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரச அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.