அ.தி.மு.க. அவசர அவசரமாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஏன்?- பரபரப்பு தகவல்கள்
1 min readADMK. Why did you publish the first phase candidate list in such a hurry? – Sensational information
6.3.2021
அ.தி.மு.க. அவசர அவசரமாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஏன் என்பதுபற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
பொதுவாக ஜெயலலிதா ஒரே கட்டமாக அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்துவிடுவார். ஆனால் தற்போது அ.தி.மு.க. முதற்கட்டமாக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. அதுவும் நேர்காணல் நடத்திய உடன் இந்த பட்டியலை வெளியிட்டது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 6 பேர் இடம்பெற்று இருந்தனர்.
இப்படி அவசரஅவசரமாக வெளியிட்டதன் காரணம் என்ன என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு நிலக்கோட்டை தொகுதிதான் காரணம் என்று கூறப்படுகிறது.
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் தேன்மொழி மீண்டும் சீட் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலக் கோட்டை தொகுதி அதிமுகவுக்குச் சாதகமான தொகுதிதான். இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 2011ம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதில்தான் ‘டி.வி’ சின்னத்தில் போட்டியிட்ட ராமசாமி வெற்றிபெற்றார்.
ஜான்பாண்டியன்
அப்பொழுது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதன் பிறகுதான் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார்.
தற்போது அந்தத் தொகுதியில் ஜான்பாண்டியன் போட்டியிட விரும்பியிருக்கிறார். அதுபோல் இத்தொகுதியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
அந்தத் தொகுதி தனக்குத்தான் வேண்டும் என்று ஜான்பாண்டியன் மத்திய மந்திரி அமித்ஷாவை நாடியுள்ளார். கடந்த மாதம் அமித்ஷா கோவைக்கு வந்தபோது ஜான்பாண்டியன் தனிப்பட்ட முறையில் கட்சிப் பொறுப்பாளர்களுடன் வரவேற்பு கொடுத்துப் பேசியிருக்கிறார்.
அப்போது, நிலக்கோட்டை தொகுதியை, தனக்கு ஒதுக்கிக் கொடுக்க தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறார். அதைப் பொறுமையாகக் கேட்ட அமித்ஷாவும் அவசியம் முதல்வரிடம் பேசி நிலக்கோட்டை தொகுதியை வாங்கிக் கொடுக்கிறேன் என்று உறுதி கொடுத்துவிட்டுச் சென்றார்.
அதன்படி சென்னை வந்த அமித்ஷா, முதல் அமைச்சர் எடப்பாடியிடமும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியனுக்கு அவசியம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
ஆனால், இத்தொகுதியின் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனோ இத்தொகுதி அதிமுக கோட்டை. அதைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது, தற்போதைய எம்.எல்.ஏ.வான தேன்மொழிக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்துகிறார்.
அதேபோல் அதிமுக கோட்டையாக இருக்கக்கூடிய இத்தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற மனநிலையில் எடப்பாடி பழனிசாமியும் ஒ.பன்னீர் செல்வமும் இருந்துவந்தனர். இருந்தாலும், அமித்ஷா தொடர்ந்து அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவந்ததார். ஆனால், நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத எடப்பாடி அவசர அவசரமாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் ஆறு வேட்பாளர் பட்டியலில் நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தேன்மொழியை அறிவித்து இருக்கிறார்.
அதைக் கண்டு, ஜான்பாண்டியன் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அது போல அதிமுகவினரும் தேன்மொழிக்கு மீண்டும் சீட் கொடுத்ததைக் கண்டு ஒருபுறம் அதிருப்தியிலும் மற்றொருபுறம் சந்தோஷத்திலும் இருந்து வருகிறார்கள்” என்றனர்.
அமித்ஷா உத்தரவை மதிக்காமல் அ.தி.மு.க. தனியாகச் செயல்பட்டது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.