தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கலாமே!
1 min readMay the election campaign be banned!
18.3.2021
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 6ந் தேதி வாக்குப்பதிவு நாள். தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் பல்வேறு கூட்டணி கட்சிகள் மோதுவதால் குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் மூன்று கட்சிகளாவது களத்தில் இறங்கி உள்ளன. அதனால் எல்லா ஊர்களிலும் தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கும்பலாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். இதில் என்னவென்றால் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை. தலைவர்கள் பிரசாரக் கூட்டத்திலும் யாரும் முகக்கவசம் அணிவது இல்லை.
தற்போது கொரோனா 2 அலை பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தினமும் 400க்கும் கீழ்தான் கொரோனா பதிவு இருந்து வந்தது. அந்த அளவுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருந்தது-. ஆனால் இப்போது கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. தினமும் 1000 பேர் என்ற அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. இதை அதிகாரிகளும் போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. அரசியல் கட்சி என்பதால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது-. அதனால்தான் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களை முகக்கவசம் அணிய வற்புறுத்த வேண்டும்.
தலைவர்கள் அறிவுறுத்தினாலும் தொண்டர்கள் பலர் கேட்கப்போவது இல்லை. அப்படியே முகக்கவசம் அணிந்தாலும் முறைப்படி அணிய மாட்டார்கள். பேசும்போது லேசாக அந்தக் கவசத்தை கீழே இறக்கிவிட்டுக்கொள்வார்கள். இப்படி செய்வதால் அந்த முகக்கவசத்தால் எந்த பலனும் ஏற்படபோதுவது இல்லை.
மேலும் முகக்கவசம் அணிந்தால் மட்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. சமூக இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். அது தேர்தல் பிரசாரத்தில் கண்டிப்பாக இருக்காது. தேர்தல் நெருங்க… நெருங்க… கொரோனா பரவல் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பிரதமர் நரேந்திமோடி கூட கவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு ஒரே வழி கடும் நடவடிக்கைதான். ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி என்றால் என்னதான் செய்வது. தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிப்பதுதான் நல்லது.
தமிழக மக்களுக்கு யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவாகத்தெரியும். எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இனி பிரசாரம் என்பது தேவையற்றது. அப்படியே தேவை என்றால் பிரசாரத்தை இணைய தளம் மூலம் பிரசாரம் செய்து கொள்ளலாம். கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம்.
உலக நாடுகள் மத்தியில் இந்தியா குறிப்பாக தமிழகம் விஞ்ஞான அறிவில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளைப்போல் அமைதியாக தேர்தல் பிரசாரம் இங்கு இல்லை. ஆனால் அமைதியான இணைய தளம் அல்லது ஊடக பிரசாரத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பது மட்டும் உண்மை.
எனவே தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால் இது
நிறைவேறும் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.