தமிழகத்தில் மேலும் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா; வேட்பாளரையும் விட்டு வைக்கவில்லை
1 min readCorona for 5 more teachers in Tamil Nadu; The candidate was not left out either
19.3.2021
தமிழகத்தில் மேலும் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. வேட்பாளர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
மாணவிகளுக்கு கொரோனா
தமிழகத்தில் 9,10,11ம் வகுப்புகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 69-ஆக உயர்ந்தது.
இதேப்போல் பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 பள்ளிகளில் கொரோனா பரவிய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சிலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 4 பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 57 மாணவிகள், 4 ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர் மற்றும் மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பள்ளிகளில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடந்து வருகிறது.
தாம்பரம்
அதேபோல் தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இங்கு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வந்தன. கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் உடற்கல்வி ஆசிரியர், வேதியியல் ஆசிரியர், தமிழ் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் மேலும் 30 ஆசிரியர்கள், 50 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்பாளர்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதை, வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன். நாங்கள் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களது கட்சி உறுப்பினர்கள் உங்களை சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.