தமிழகத்தில் இன்று 1,243 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,243 people in Tamil Nadu today
20.3.2021
தமிழகத்தில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்த நாடும் கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லத்தக்க விதத்தில் ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு நாள் பாதிப்பு சற்றேறக்குறைய 1 லட்சம் அளவுக்கு சென்று விட்டு பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் அடங்கி இருந்தது. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக நேற்று ஆயிரத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 1,243- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 458- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 8- பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 693- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 634- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று 75,165- பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் 7 ஆயிரத்து 291- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.