மதுரையில் அரசு ஆஸ்பத்திரி நர்சு அடித்துக்கொலை; தந்தை கொடூரம்
1 min readGovernment hospital nurse beaten to death in Madurai; Father cruelty
20/3/2021
மதுரையில் பெற்ற மகளை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நர்சு
மதுரை வண்டியூர் சங்கு நகர் மகாராஜா தெருவைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. ஆட்டோ டிரைவர். இவரது மகள் மீனாட்சி தேவி (வயது 26), திருமணம் ஆகவில்லை.
இவர் ஜெய்ஹிந்துபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
மீனாட்சி தேவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வீட்டில் தெரிவித்து உள்ளார். இந்த காதலுக்கு தந்தை ஆசைத்தம்பி எதிர்ப்பு தெரிவித்தார்.
“நீ என் மகள். நான் யாரை மாப்பிள்ளையாக பார்க்கிறேனோ, அவரை தான் திருமணம் செய்ய வேண்டும்” என்று பிடி வாதம் காட்டினார்.
இருந்தபோதிலும் மீனாட்சி தேவி காதலை கைவிட மறுத்து விட்டார். இது ஆசைத்தம்பிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கொலை
மீனாட்சி தேவி நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் ஆசைத்தம்பிக்கு விழிப்பு தட்டியது.
படுக்கையில் இருந்து எழுந்தவர், “நாம் எவ்வளவு சொல்லியும் மகள் கேட்க மறுக்கிறாளே?” என்று ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மீனாட்சி தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் பெற்ற தந்தையே மகளை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.